Search This Blog

Tuesday, 25 July 2017

வைகுண்டவாசர் பெருமாள் - மாங்காடு

  •  காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தங்கை பார்வதிக்காக திருமணச்சீர் கொண்டு வந்த வைகுண்டவாசர் கோவில் கொண்டிருக்கிறார். சீதனத்துடன் வந்த சீனிவாசரான இவரை தரிச்சித்தால் பணத்தடை நீங்கி திருமணம் விமரிசையாக நடந்தேறும் என்பது தலத்தின் ஐதீகம். கைலாயத்தில் ஒரு சமயம் அம்பிகை சிவனின் கண்களை விளையாட்டாக மூடவே  உலகம் இருளில் மூழ்கியது. அம்பிகை மீது கோபம் கொண்ட சிவன்,அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபமிட்டார் பூலோகம் வந்த அம்பிகை மானிடப்பெண்ணாக சிவன் மீது  பக்தி கொண்டு வாழ்ந்தாள். சிவன் தன்னைத் திருமணம் செய்ய வேண்டுமென தவத்தில் ஆழ்ந்தாள். தங்கை பார்வதிக்காக வைகுண்டத்தில் இருந்து மகாவிஷ்ணுவும் சீர் கொண்டு வந்தார்.
  • அச்சமயத்தில் அசுரகுருவான சுக்ரச்சாரியரும் சிவனை வேண்டி பூலோகத்தில் தவமிருந்து வந்தார்.தனது குடும்பத்தை விட பக்தனுக்கே முதலிடம் தந்த சிவன், சுக்ராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார். அம்பிகையும்.சுக்ராச்சாரியாரும் தவம் புர்ந்து கொண்டிருந்த இடம் இன்றைய மாங்காடு (சென்னை) என சொல்லப்படுகிறது. சுக்ராச்சாரியருக்கு வரமருளிய சிவன், அம்பிகைக்கும் காட்சி தந்து, காஞ்சிபுரத்தில் மணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். அம்பிகையும் காஞ்சிபுரம் சென்று தவ வாழ்க்கையைத் தொடர்ந்தாள்  பூலோகம் வந்த மகாவிஷ்ணு, மாங்காட்டில் தங்கையைக் காணாமல் தவித்த சமயத்தில், மார்க்கண்டேய மகரிஷி அவரைக் கண்டு நடந்ததைக் கூறினார். புண்ணியதலமான மாங்காட்டில் தங்கும்படி கேட்டுக் கொண்ட. பெருமாளும் வைகுண்டவாசர் என்னும். திருப்பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளினார்
சீதனுத்துடன் பெருமாள்:
  •  வைகுண்ட பெருமாள் கையில் பிரயோக சக்கரம்  வைத்த நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார். அருகில் மார்க்கண்டேயர் தவம் செய்த நிலையில் இருக்கிறார். தங்கைக்கு திருமணச்சீராக பெருமாள் கொண்டு வந்த  மோதிரம் வலது கையில் இருக்கிறது. கனகவல்லித் தாயார் தனி சன்னிதியில்
  •  வீற்றிருக்கிறார்.பிரகாரத்தில்ஆண்டாள்,ஆஞ்சநேயர்,திருக்கச்சிநம்பிகள், நம்மாழ்வார், ராமானுஜர், விஷ்வக்சேனர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
விமரிசையாக திருமணம்:
  •  சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபட்டால் பொருளாதாரத் தடை நீங்கி திருமணம் விமரிசையாக நடந்தேறும் என்பது    ஐதிகம். வைகுண்டத்தில் இருந்து நேரடியாக பூலோகம் வந்ததால், வைகுண்டவாசர் என்று பெயருடன் விளங்குகிறார்.  இத்தலமே வைகுண்டமாக திகழ்வதால், சொர்க்கவாசல் தனியாக இங்கு அமைக்கப்படவில்லை ஏகாதசி நாட்களில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். கருவறைக்கு எதிரே  கருடாழ்வாழ்வார் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இவருக்கு சிறகு இரண்டும் மூடிய நிலையில் உள்ளது மாறுபட்ட துவாரபாலகர் பெருமாள் கோவில்களில் ஜெயன், விஜயன் ஆகியோரே துவாரபாலகர்களாக இருப்பது வழக்கம். இங்கு அவிரட்சகன், அக்னி என்னும் பெயரில் துவாரபாலகர்களாக இருப்பது மாறுபட்ட அமைப்பாகும். தலவிருட்சமாக மாமரம் உள்ளது மாங்காடு காமாட்சியம்மன் கோவிலும், சிவன் சுக்ராச்சாரியருக்கு காட்சி தந்த வெள்ளீஸ்வரர் கோவிலும் சற்று தூரத்தில் உள்ளன.

நாழிக்கிணறு - திருச்செந்தூர்

திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு
  • நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் உள்ள புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
  • அசுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.
  • சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.
  • போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.

ராமன் - சீதை திருமணம் இனிதே நடந்தேற தானே முறிந்த தனுசு!!!

  • மிதிலையே மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. திடுக்கென்று ஒரு லேசான அதிர்ச்சியுடன் மக்கள் மனம் பூராவும் ஆனந்தம் பொங்கிக் கொண்டிருந்தது. எதிர்பாராத வகையில் பனித்துளி ஒன்று திறந்த மார்பில் பட்டால் சிலிர்க்குமே, அந்த உணர்வு. இயற்கைக்கு முரணான இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது? ஒட்டு மொத்தமாக அனைத்து உயிரினங்களுக்குமே மனம் உற்சாகமாகத் துள்ளும்படியாகச் செய்தது எது?
  • அதற்குக் காரணமானவனான, அப்போது அந்த ஜனகபுரிக்குள் தன் பொற்பாதங்களைப் பதித்த, ராமனுக்கே அது தெரியாது. மாமுனிவர் விஸ்வாமித்திரர் முன்னே செல்ல, அவர் வழிகாட்டலில் அவருக்குப் பின்னால் அமைதியாக ஆனால், கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான் ராமன்.
  • இவனுக்குப் பின்னால் சுற்றுமுற்றும் பார்த்தபடி, அண்ணனுக்கு எத்திசையிலிருந்தும் எந்தத் தீங்கும் நெருங்கிவிடாதபடி, பாதுகாப்பாக வந்து கொண்டிருந்தான் லட்சுமணன். தான் யாகம் மேற்கொள்ள முடியாதபடி இடையூறு செய்த மாரீசன், சுபாகு ஆகிய அரக்கர்களை அடக்கி, அவர்களை வீழ்த்துவதற்காகத்தான் தன்னை அவருடன் அழைத்து வந்திருந்தார் முனிவர் என்றே நினைத்திருந்த ராமன், அந்தச் செயல் முடிந்தபிறகு மீண்டும் அயோத்திக்குச் செல்லாமல் மிதிலைக்கு அவர் அழைத்து வந்ததற்கான காரணத்தை அறியமுடியாதிருந்தான்.
விஸ்வாமித்திரரின் நோக்கம்தான் என்ன?
  • மகரிஷி மிதிலைக்கு வருகிறார் என்று அறிந்ததும் ஜனகர் அரண்மனை வாயிலுக்கே ஓடோடி வந்து வரவேற்றார்.முனிவருடன் வந்த இரு இளம் பிராயத்தினரையும் கண்டு திகைத்தார். ஆயிரம் கோடி சூர்யப் பிரகாசமாகத் திகழும் அந்த அழகன் யார்? அவனுக்குப் பின்னால் வரும் இளவல் யார்? முன்னே வருபவன் அப்படியே அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டுவிடுகிறானே! ம்... இவன் முனிவரின் மாணவனாக மட்டுமே இல்லாமல் என்னுடைய மருமகனாகவும் ஆவானா? இவன் என் மருமகனாக வேண்டுமானால் என்னுடைய நிபந்தனையை இவன் நிறைவேற்ற வேண்டுமே, செய்வானா?
  • அந்தப் பகலிலும்்உப்பரிகையில் பளிச்சென்று ஒரு நிலவு தென்பட்டது ராமனுக்கு. சற்றே தலைதூக்கி, நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட அவனது பார்வையில் பட்ட அந்த நிலவும் சட்டென மேலும் ஒளிர்ந்தது. இந்த பார்வைப் பரிமாற்றம் மாலை பரிமாற்றத்தில் முடியுமா? அது இப்படி ஒரு இனிய சந்திப்புக்காகத்தானோ? ஏக்கத்துடன், முனிவரின் வேகத்துக்கு ஈடுகட்டும் வகையில் தன் நடையை அவன் துரிதப்படுத்தினான்.
  • பின்னால் வந்து கொண்டிருந்த லட்சுமணன் அண்ணன் பார்வை பதிந்த இடத்தையும், நிலவில் பட்ட அந்த பார்வை,கயல்விழி காந்தமாகத் திரும்பி அண்ணனின் விழிகளிலேயே வந்து சேர்வதையும் கவனித்தான். உப்பரிகை மங்கையின் பார்வையில் தெரிந்த நாணம், அண்ணனின் மனம் கனிந்திருப்பதையும் அவனுக்கு உணர்த்தியது. அந்தக் கனிவு அவரது வாழ்க்கையை சுவைமிக்கதாகச் செய்யவேண்டுமே என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டான்.
  • நான்கு விழிகளின் பார்வை சந்திப்பில் இரு மனங்கள் ஒன்றாகிவிட்ட அதிசயம் அங்கே நடந்தது. அதுதான் முதல் பார்வை. சந்திப்புகூட இல்லை. என்னவோ பூர்வ பந்தத் தொடர்புபோல மனங்கள் மட்டும் கலந்துவிட்ட அற்புதம் அங்கே நிகழ்ந்தது. அவள், பெண்மையின் இயற்கையில் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.ஆனாலும், உப்பரிகையிலிருந்தபடி அவள் அப்படிச் செய்ததால் அந்தத் தாழ்ந்த பார்வையும் அவனைச் சுற்றியே வேலியிட்டிருந்தது.
  • சாலையில் தொலைதூரத்திலேயே நடந்து வந்து கொண்டிருந்த அவனைப் பார்த்தவளுக்கு அவன் நெருங்கி வரவர, அதனால் விரிந்த அவள் விழிகள் தாழ, அப்போதும் அவன் அவள் பார்வைக்குள்ளேயே சிறைபட்டிருந்தான். ராமனும் அவளுடைய பார்வை கொக்கியில் தன் பார்வை சிக்கிக் கொண்டுவிட்டதை அறிந்தும், அதிலிருந்து மீளமுடியாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான்.
  • எல்லாம் அறிந்த முனிவரோ மெல்லிய புன்னகையுடன் வேகமாகவே போய்க் கொண்டிருந்தார். ராமனுக்கும் தவிப்புதான், அவருடைய அடி ஒற்றியே போக வேண்டியிருந்ததால் அவருடைய வேகம் அவனுக்கு மனவருத்தத்தைத் தந்தது. மெதுவாகப் போகமாட்டாரா இவர்? அந்த உப்பரிகையை வேகமாகக் கடந்து விடுவோம் போலிருக்கிறதே. கட்டாயப்படுத்தி பார்வையை விலக்கிக் கொள்ளத்தான் வேண்டுமா?
  • ஜனகர் கைகூப்பி வரவேற்க, தன் வழக்கமான, ஆரவார தோரணையுடன், அரண்மனைக்குள் நுழைந்தார் விஸ்வாமித்திரர். இளைஞர் இருவரும் அமைதியாக அவரைப் பின்தொடர்ந்தனர். சம்பிரதாய உபசரிப்புகள் எல்லாம் முடிந்தன. முனிவர் கேட்டார். “ஜனகரே, உங்கள் மகள் சீதையை மணம் முடிக்க விரும்புபவனுக்கு நிபந்தனை ஒன்றை விதித்திருக்கிறீர்கள் அல்லவா?” “ஆம், முனிவரே, இதுவரை பல தேசத்து மன்னர்களும் பிற இளைஞர்களும் வந்து முயன்று தோற்றுதான் போயிருக்கிறார்கள்.
  • நானும் உண்மையான வீரன் ஒருவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.இனி நான் காத்திருக்க வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்” என்று பதில் கூறிய ஜனகர், சற்றே ஆழமாக ராமனைப் பார்த்தார். அந்தப் பார்வையைப் புரிந்து கொண்ட விஸ்வாமித்திரர், “உன் மகளுக்கு முற்றிலும் பொருத்தமான ஒருவனைத்தான் நானும் அழைத்து வந்திருக்கிறேன்” என்று பதில் சொன்னபடி ராமனை நோக்கி முறுவலித்தார்.
  • ராமனுடைய உள்ளம் படபடத்தது. ஜனகரின் மகள் யார்? அவள் அந்த உப்பரிகைப் பெண்ணாகவே இருந்துவிட வேண்டுமே... அதுசரி, அது என்ன நிபந்தனை? இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அது தன்னுடைய வீரத்தை வெளிப்படுத்தும் ஒரு சாதனையாகத்தான் இருக்க முடியும். எப்படிப்பட்ட சவால் அது?
  • ஜனகரே அதை விளக்கினார்: “என்னிடம் எங்கள் மூதாதையர் வழிவழி வந்த அற்புதமான தனுசு ஒன்று உள்ளது. தெய்வ அனுக்ரகமாக என்னிடம் வந்து சேர்ந்த தெய்வ அம்சம் பொருந்திய என் மகள் சீதை, அதேபோன்ற தெய்வ அம்சம் பொருந்திய ஒருவனைத்தான் மணக்க வேண்டும் என்று நான் கருதியிருந்தேன்.அதனால்தான் மிகவும் புனிதமான இந்த சிவ தனுசில் நாணேற்றும் நாயகனுக்கே என் மகளை நான் மணமுடித்து வைப்பதாகத் தீர்மானித்தேன்.
  • இதுவரை பலரும் வந்து முயற்சித்துவிட்டுப் போய்விட்டார்கள். ஆனால், அந்த முயற்சிகளில் தெய்வீகம் இல்லை, அலட்சியமும், அகம்பாவமும்,பேராசையும், தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்பும்தான் இருந்தன. இந்தத் தீய குணங்களால் தம்முடைய இயல்பான ீவீரத்தையும்,ஆண்மை திறத்தையும் அவர்கள் அனைவரும் இழந்து கேலிக்குரியவர் களாக ஆனதுதான் மிச்சம்.
  • இனியும் யாரேனும் வருவார்களா, தெரியவில்லை. காத்திருக்கிறேன்...” “இந்த ராமன், அயோத்தி சக்கரவர்த்தி தசரதனின் மகன். இவனுக்குப் பின்னால் நிற்பவன், அவனுடைய இளவல் லட்சுமணன். இவர்கள் இருவரும் அசகாயசூரர்கள்” -விஸ்வாமித்திரர் ஜனகரிடம் சொன்னார். “நான் முறையாக யாகம் நடத்த முடியாதபடி இடைஞ்சல் செய்த அரக்கர்கள் இருவரை வீழ்த்தியவர்கள். அதற்கு முன்னால் தாடக வனத்தில் அடாத செயல் புரிந்து, முனிவர்களையும், மக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த தாடகையை தன் ஒரே அம்பால் சாய்த்தவன் இந்த ராமன்.
  • இந்த மென்மையான உடலுக்குள், கருணை ததும்பும் விழிகளுக்குப் பின்னால் இத்தனை பராக்கிரமம் புதைந்திருப்பதைப் பார்த்து நான் வியந்து மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சியை உன்னுடனும் நான் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால், அதுபோன்ற ஒரு சாதனையை இங்கும் ராமன் நிகழ்த்த வேண்டும். அது உன்னிடமுள்ள சிவதனுசில் நாணேற்றுவதாக இருந்தால் நான் பெரிதும் மகிழ்வேன்...” “அது என்னுடைய பாக்கியம்’’ என்று சொல்லி ஆனந்தப்பட்டார் ஜனகர். “இப்போதே அந்த அரிய காட்சியை அனைவரும் காணுமாறு செய்வோம்.” இவ்வாறு சொன்ன ஜனகர் தன் படை வீரர்களை அழைத்தார்.
  • சைகை செய்தார். சிறிது நேரத்தில் பிரமாண்டமான தனுசு ஒன்று அவர்களால் தூக்கி வரப்பட்டது. ஒரு மேடை மீது வைக்கப்பட்டது. அந்த வில்லைப் பார்த்து ராமன் மென்மையாகப் புன்னகைத்தான். பக்கத்திலிருந்த லட்சுமணன் வழக்கம்போல எதற்கோ அவசரப்பட்டான்.
  • முனிவரை நெருங்கி அவர் காதில் எதையோ கிசுகிசுத்தான். பளிச்சென்று கோபமானார் முனிவர். ‘‘இந்த தனுசை முறிக்க அண்ணன் எதற்கு? நானே செய்துவிடுவேனே!ஊராருக்கெல்லாம் என் அண்ணனின் பராக்கிரமத்தை இப்படி விளக்கலாமே,அதாவது, என்னாலேயே இந்த தனுசில் நாணேற்ற முடியுமானால்,
  • என் அண்ணனால் இன்னும் என்னவெல்லாமோ செய்ய முடியும் என்பதை என் செயல் மூலம் நிரூபிக்க விரும்புகிறேன்’’ என்ற அவனுடைய சொற்கள் அவரைக் கோபம் கொள்ள வைத்தன. “மிதிலைக்குள் வரும்போது எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ராமனுக்குப் பின்னால்தான் நீ வந்து கொண்டிருந்தாய்.வழியில், ராமன் உப்பரிகை மீது நின்றிருந்த ஆரணங்கை நோக்கியதையும், அவளும் இவனை நோக்கியதையும் கவனிக்கத் தவறிவிட்டாயா?
  • அவள்தான் சீதை. அவளை மணக்க வேண்டியவன் ராமன்தான். அதற்கு அவன்தான் இந்த தனுசில் நாணேற்ற வேண்டும். விதியை விளக்க வேண்டுமானால், இந்த தனுசு ராமனால் மட்டுமே நாணேற்றப்படும். மற்றவர்கள் முயற்சி வீண் விரயம்தான். அந்த மற்றவர்களில் ஒருவனாக நீயும் ஆகிவிடாதே...” என்று சொல்லி எச்சரித்தார்.
  • தன்னுடைய அவசர புத்தியை வழக்கம்போல தானே நொந்து கொண்டான் லட்சுமணன். அண்ணனை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று தான் மேற்கொள்ள நினைத்த இந்த முயற்சி, தனக்கு அவமானத்தைத் தந்தாலும் பரவாயில்லை, ராமனுக்கு எந்த இழப்பையும் தந்துவிடக்கூடாது என்று நினைத்து அமைதியாக ஒதுங்கிக் கொண்டான்.
  • அவையே பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது. மிதிலாபுரி வீதிகளில் ராமன்முனிவருடனும் லட்சுமணனுடனும் வந்து கொண்டிருந்ததைப் பார்த்திருந்த மக்கள்,ராமன்தான் தனுசில் நாணேற்றப் போகிறான் என்பதை ஊகித்து பெரும் திரளாக அரசவையில் பார்வையாளர்கள் பகுதியில் வந்து நிறைந்தார்கள்.
  • ஒவ்வொருவர் கண்களிலும் துடிப்பு மின்னியது. ‘‘பேரழகன் இவன். நம் சீதைக்கு மிகவும் பொருத்தமானவன்.இவன் வில்லை வெல்ல வேண்டும். நாணேற்றி நிறுத்த வேண்டும். நம் சீதையை மணக்க வேண்டும்.இந்த நல்ல தருணத்திற்காகத்தான் இவனுக்கு முன் வந்தவர்கள் யாராலும் நாணேற்ற முடியவில்லை போலிருக்கிறது.அவர்கள் தோற்றதும்தான் இப்போது எவ்வளவு நல்லதாகப் போயிற்று! திண்ணிய தோளும்,
  • அகன்ற திருமார்பும் கொண்ட இந்த ஆணழகனுக்காகவே காத்திருந்தது போலிருக்கிறது.. ஜனகபுரி மக்களின் எண்ண ஓட்டம் இவ்வாறிருக்க, அந்தப்புரத்தில் சீதையின் உள்ளமும் உடலும் பதறிக் கொண்டிருந்தன.
  • ‘‘என் விழிகளை சந்தித்தவன் சிவதனுசை கையிலேந்தப் போகிறான் என்று தோழியர் சொன்னார்களே,அது உண்மையாக இருக்க வேண்டுமே... அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில்,அந்த தனுசு அவனது சிவந்த, பரந்த கைகளுக்குள் குழைந்து நிற்க வேண்டுமே. குழைவதோடு, அவன் நாணேற்றும்போது மறுக்காமல், விரைக்காமல், விநயமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே. என் அன்பு சிவதனுசே, நான் பிறந்த நாள் முதல் உன்னை இந்த அரண்மனையில் பார்த்து கொண்டிருக்கிறேன் பாரம்பரிய வழக்கமாக உன்னை பூஜித்திருக்கிறேன். உன் பக்தையாக நான் உன்னை மலரிட்டு அலங்கரித்திருக்கிறேன்.என்னைக் கைவிட்டு விடாதே. என்னைக் கவர்ந்தவன் கைப்பிடிக்குள் இணக்கமாகிவிடு. அவனிடம் அடங்கிவிடு.
  • என்னை உன் இளைய சகோதரியாக நினைத்துக்கொள். ஒரு அண்ணனாக, என் மனவிருப்பத்தை நிறைவேற்றி என் உயிரை நிலைக்கச் செய்...’’ தனுசும் ராமனைப் பார்த்தது. ‘‘இது சும்மா சம்பிரதாயம்தான் ராமா. உனக்குதான் சீதை என்ற தேவலோக பிராப்தம் தவறுமா என்ன? சீதையை அவளுடைய தகுதிக்குக் குறைந்தவன் எவனும் கரம் பற்றிவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தால் உருவாக்கப்பட்டதுதான் இந்தப் போட்டி. இதில் வெற்றி பெறுவதற்கென்றே நீ இருக்கும்போது, மற்றவர்கள் என்னை பற்றிடவும் நான் அனுமதிப்பேனோ..?
  • அதனால்தான் யாரையும் என்னில் நாணேற்றிட நான் அனுமதித்ததில்லை. வா, ரகுகுல திலகா, தயாசாகரா, என்னை ஆட்கொள்...’’ என்று யாசித்தது. ராமன் விஸ்வாமித்திரரைப் பார்த்தான். அவர் சம்மதமாய் தலையசைத்தார். தம்பி லட்சுமணனைப் பார்த்தான். அவன் சற்றே நாணப்பட்டு ஒதுங்கி நின்று சம்மதம் தெரிவித்தான். ஜனகரைப் பார்த்தான். அவர் கண்களில் பேரார்வத்துடன் மலர்ந்திருந்தார். தனுசைப் பார்த்தான். அதில் சிவ அம்சத்தைக் கண்டு கும்பிட்டான். ‘என் வெற்றிக்கு உதவுங்கள்’ என்று மானசீகமாகக் கேட்டுக் கொண்டான்.
  • சுற்றி நின்றிருந்த அனைவரும் படபடக்கும் இதயத்துடன் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவைக்கு வரமுடியாத சட்டத்திற்கு உட்பட்ட பெண்கள் தத்தமது பகுதிகளில் அமர்ந்தபடி என்ன செய்தி வருமோ, ராமன் வெல்வானோ, சீதையைக் கரம் பிடிப்பானோ என்றெல்லாம் கண்களில் ஆர்வம் மின்ன ஆவலுடன் காத்து கொண்டிருந்தார்கள். தனுசைப் பார்த்து வணங்கிய தன் கரங்களைப் பிரித்தான் ராமன். தனுசின் நடுப்பகுதியைத் தன் இடது கையால் பற்றினான்.அப்படியே தூக்கினான். மேடையிலிருந்து கீழே இறங்கினான்.
  • தனுசின் கீழ்ப் பகுதியை நாணின் ஒரு முனை பற்றியிருக்க அடுத்த முனையை இழுத்து மேல் பகுதியுடன் இணைக்க வேண்டும். கீழ்ப்பகுதி தரையில் சறுக்கி நழுவிவிடாதிருக்க, தன் வலது பாதத்தால் அதைப் பற்றிக்கொண்டான். இணைக்கப்பட வேண்டிய நாண் முனையை வலது கையால் எடுத்தான். மேல்நோக்கி இழுத்துச் சென்றான். தனுசின் மேல்பகுதி ராமனுடைய சிரசை ரிசித்தது.அவனுடைய முக அழகை ரசித்தது. இடுப்பு வரை அவனுடைய கம்பீரத்தைக் கண்டு பிரமித்தது.
  • ஆனால், அவனது பாத அழகு எப்படி இருக்கும்? தன்னால் அந்த சௌந்தர்யத்தைப் பார்க்க முடியவில்லையே ...ஆனால், கீழ்ப் பகுதிக்குதான் எத்தனை பெரிய பாக்கியம்! ராமன் தன் பாதத்தால் பற்றக்கூடிய பெரும் பேறு பெற்றிருக்கிறதே! இது அநியாயம். என்னில் ஒரு பகுதி என்னைவிட பெருமை அடைவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே.சிரம் பார்த்து, முகம் பார்த்து, மார்பழகு கண்டு, இடுப்பு எழில் நோக்கினாலும் பாதத்தைச் சரணடையும் பக்குவம் எனக்கு இல்லை என்று நினைத்தானோ ராமன்?
  • மேல் பகுதிக்கு ஆதங்கம் தாங்கவில்லை. மாட்டேன், நானும் அண்ணலின் பாதம் பணிவேன். என்னையும் அவர் பாதம் ஸ்பரிசிக்க வேண்டும்.எனக்கும் அந்தப் பேறு கிட்ட வேண்டும்... அப்படியே குனிந்தது மேல் பகுதி. கீழே... கீழே... குனிந்தது.ராமனின் பாதத்தைத் தானும் தொட்டுவிடும் வேட்கையில் குனிந்தது. தன்னை அவன் பாதம் தீண்டாவிட்டாலும், தானாக முயன்று தொட்டுவிட குனிந்தது..
  • .நாண் பிடித்திருந்த ராமனின் வலது கரம் தயங்கியது. இன்னும் சற்று உறுதியாகப் பற்றினான். இழுத்தான். அவ்வளவுதான். படீர் என்ற பேரொலியுடன் இரண்டாக முறிந்து வீழ்ந்தது தனுசு. ஒன்றாக இருந்தபோது ராமனின் கரம் பற்றிய பேறு கொண்ட அந்த தனுசு,இப்போது இரண்டாகி அவன் பாதத்தைச் சரணடைந்திருந்தது.
  • அவையில் கரகோஷம், கடலலையாகப் பொங்கியது. தனுசை ராமன் எடுத்தது கண்ட அவர்கள், அடுத்த கணமே அது இற்றது கேட்டதும், பேரானந்தம் அடைந்தனர். தன் எண்ணம் எந்த இடையூறுமின்றி ஈடேறியதைப் பார்த்து ஜனகரும், அரச குடும்பத்தினரும் அளவிலா மகிழ்ச்சி எய்தினர். உப்பரிகையில் தன்னைப் பார்வையால் கவர்ந்தவன், தொடர்ந்து தன் மனதையும் கவர்ந்தவன், இப்போது தன் கரம் பற்றி வாழ்க்கையையும் கவர்ந்துவிட்ட பெருமையில் சீதை நாணச் சிவப்பு பூண்டாள்.
  • தனுசை முறித்தவன் உடனே அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சீதைக்கு மாலையிட வேண்டியிருந்ததால் சீதை அரசவைக்கு வரவழைக்கப்பட்டாள். சந்தோஷத்தால் கொந்தளித்துக் கொண்டிருந்த தன் அகத்தை முகம் காட்டிவிடுமோ, சுற்றியிருப்போர் பரிகசிப்பார்களோ என்ற நாணத்தில் தலை குனிந்தபடியே நின்றிருந்தாள் சீதை.
  • தன்னைச் சுற்றி நிற்கும் தோழியர்களிலிருந்து தன்னை தனிப்படுத்திக் காட்டி, ராமனுடைய கவனத்தைக் கவர்வது எப்படி? இந்த யோசனையால் கையைப் பிசைந்தவளுக்கு அந்தக் கரங்களில் அணிந்திருந்த வளையல்கள் கை கொடுத்தன. அந்த வளையல் அடுக்கை சரி செய்வதுபோல தன் கரங்களைக் குலுக்கினாள். கலகலவென சிரித்த வளையோசை கேட்டு தன் பார்வையைக் கூர்மையாக அந்தப்புரப் பெண்கள் கூட்டத்தை நோக்கித் திருப்பினான் ராமன்.
  • பிற பெண்கள் தலை நிமிர்ந்து அடுத்து நடக்கப் போகும் இனிய நிகழ்ச்சியை அனுபவிக்கத் தங்களைத் தயார் செய்து கொண்டிருக்க, முன் வரிசையில் நடுநாயகமாக,லேசாக நடுங்கும் உடலுடன் நின்று கொண்டிருந்த சீதையை அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. அவள் தன்னைக் கவர்ந்த உப்பரிகைப் பெண்தானோ? அதை எப்படி அறிவது?
  • தன் பார்வையை அவன் அந்த வளையல்கள் மீது செலுத்தினான்.அகன்று, பளபளப்பாக ஜொலித்துக் கொண்டிருந்த அந்த வளையல்கள், தலைகுனிந்தபடி நின்றிருந்த அவளுடைய முகத்தை பிரதிபலித்து ராமனுக்கு அடையாளம் காட்டியன! நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ராமன்.
  • ஜனகர் மலர் மாலையை எடுத்துக் கொடுக்க, ராமன் சீதைக்கு மாலையிட்டான். அயோத்திக்குத் தகவல் போயிற்று. பெருமகிழ்ச்சியடைந்த தசரதன் தன் மனைவியர் மற்றும் பரிவாரங்களுடன் மிதிலாபுரிக்கு வந்தான்.
ராமன் - சீதை திருமணம் இனிதே நடந்தேறியது

ஸ்ரீ ரங்க கோபுர விமானத்தின் சிறப்பு

  • மத்ஸ்யாவதாரம் கூர்மாவதாரம் ஹயக்ரீவர்போ ன்ற பல ரூபங்களில் மகாவிஷ்ணுவை தரிசித்த பிரம்மா குழப்பமடைந்து " மஹாவிஷ்ணுவே தங்களுடைய உண்மையான ரூபத்தை தரிசிக்க விரும்புகிறேன் " என்றார்.

  • அதற்க்கு விஷ்ணு பகவான் " அப்படிஎன்றால் " ஓம் நமோ நாராயணாய " எனும் அஷ்டாச்சரமந்திரத்தை ஜெபியும் " என்றார்.உடனே பிரம்மதேவர் அஷ்டாச்சர மந்திரத்தை ஜபித்த வாறே பற்பல ஆண்டுகாலம் தவத்தில் ஆழ்ந்தார்.

  • பின்னர் மகாவிஷ்ணுவின் மனம் குளிர்ந்து க்ஷீர சாகரத்தில் ஒரு விமானத்தில் நாற்கரங்களுடன் சங்கு சக்ரதாரியாய் சயன கோலத்தில் பரவாசுதேவனாக தோன்றினார்.

  • பிரம்மதேவர் வேத கோஷங்கள் முழங்கி பலவாறு வணங்கினார். அப்படித்தான் திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து தோன்றியதாகும். பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இக்ஷ்வாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்

  • இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேக வைபவம் காண வந்திருந்த விபீஷணனுக்கு, ராமர் இவ்விமானத்தைப் பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரிக் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான்.

  • எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி’’ பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

  • தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது.

  • பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடனும் (அந்தக் கிளி ‘‘வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்’’ என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது), தனக்கு வந்த கனவுத் தகவல் மூலமாகவும் விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானம் மற்றும் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.

மஹா பாரதத்தில் முக்கியமானவர்கள்

மஹா பாரதத்தில் இந்த 5 பேர் முக்கியமானவர்கள்
  • பீமன்
  • துரியோதனன்
  • இடும்பன்
  • கீசகன்
  •  ஜராசந்தன்
  • இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை என்னவென்றால் 5 வரும் சம பலம் உடையவர்கள் ஒவ்வொருவரும் 10 யானை பலம் கொண்டவர்கள். (சிலர் 100 யானை என்றும் சொல்வதுண்டு). இதில் ஜராசந்தன் மகதத்தின் அரசன். கீசகன் விராட நாட்டின் சேனாபதி. இடும்பன் இடும்ப வனத்தின் அதிபதி அரக்கன். பீமனும் துரியோதனனும் ஹஸ்தினாபுர இளவரசர்கள்.
 
  • இதில் யார் யாரை முதலில் கொல்கிறார்களோ அவருக்கு கொல்லப்பட்டவரின் பலம் வந்து சேரும். பீமன் வாயு புத்திரன் வாயுவின் அம்சம். வானராவத அரக்கு மாளிகையில் துரியோதனன் பீமனை கொல்ல நினைக்க, பீமன் தப்பித்து இடும்பனை சந்திக்க நேரிடுகிறது. பீமன். இடும்பனை கொல்ல நேர்ந்தது. 

  • இதன். தொடர்ச்சியாக மற்ற மூவரையும் பீமனால் கொல்லப்பட்டனர். பீமனும் இடும்பனும். சந்திக்க அரக்கு மாளிகை காரணமானது விதி வலியது. பீமனிடம் இருந்த தர்மமும், ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசியும் இதை செய்தது அரக்கு மாளிகை இல்லை என்றால் பீமன் இடும்பன் சந்திப்பே நிகழ்ந்து இருக்காது.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]