ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும், கற்றுணர்ந்த சரஸ்வதி ஒரு முறை தவம் செய்ய நினைத்தார். இதற்காக பூவுலகில் அமைதியும், அழகும், நிறைந்த கூத்தனூரை தேர்ந்தெடுத்தாள். அம்பாளே இங்கு தவம் புரிந்ததால் இந்த ஊர் ‘அம்பாள் புரி’ எனவும் அழைக்கப்படுகிறது.
கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார்.ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.
தலவரலாறு :
சத்தியலோகத்தில் ஒரு முறை சரஸ்வதிக்கும், பிரம்மனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கு அரசியான தன்னால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத்தொழிலால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று பிரம்மனும் வாதிட்டனர். வாதம் முற்றி, ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர்.இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணிய கீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், சிரத்தை என்ற பெயரில் மகளாகவும் பிறந்தனர்.
அவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் வரன் தேட தொடங்கினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்கும். இது இயலாத காரியம். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்று கூறி, சரஸ்வதியிடம் நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாய் என்று கூறி அருள்பாலித்தார். அதன்படி சரஸ்வதி தேவி, கூத்தனூரில் தனியாக கோவில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.
சரஸ்வதி தேவியை தேடி சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து குப்த கங்கையாக காட்சி அளிக்கிறது.
குழந்தைகளுக்கு கல்வி தோஷம் போக்கி ஞானப்பால் ஊட்ட, திருவுளம் கொண்ட சரஸ்வதி அமைதியே தவழும் வடிவம் கொண்டாள். வெள்ளை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். கீழ் வலது கையில் சின்முத்திரை, கீழே இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கரத்தில் கலசமும் தாங்கி காட்சி தருகிறாள்.
ஜடாமுடியுடன் கருணை புரியும் விழிகளும், ஞானசஷஸ் என்ற மூன்றாவது திருக்கண்ணும், புன்னகை தவளும் திருவாயுமாக கிழக்கு முகமாக அருளாட்சி புரிகிறாள்.
சிவன் கோவிலில் மகா துர்க்கையும், பெருமாள் தலத்தில் மகாலட்சுமியும் தனிக்கோவில் கொண்டு, கூடவே சரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை.\
அமைவிடம் :
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் இறங்கினால் 5 நிமிட நடைபயணத்தில் கோவிலை அடையலாம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்கு பூந்தோட்டம் வழியாக செல்லும் பஸ்சிலும் வரலாம்.
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறையில் செல்லும் பஸ்சில் ஏறி 25 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை சென்று அடையலாம்.
கும்பகோணத்திலிருந்து சுவாமி மலை, கபிஸ்தலம் வழியில் திருவையாற்றின் அருகில் உள்ளது சந்திரனுகுரிய தலமான " திங்களூர் ". தஞ்சவூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவரப் பாடல்பெற்ற தலம் இது. 63 நாயன்மார்கல்ளில் ஒருவரான "அப்பூதி அடிகளார் " வாழ்ந்த தலம் இது. அம்புலி, இந்து, கலாநிதி, குமுத சகாயன், சசாங்கதன், கதிர், நிலா, மதி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சந்திரன் சிவ பெருமானின் முக்கண்ணில் இடது கண்ணாக விளங்குபவர். சாத்வீக குணம் கொண்ட இவர் ஒரு சுப கிரகர். பராசக்தியின் அம்சமான இவர் திருப்பதி வெங்கடாசலபதியின் காலடியில் குடி கொண்டுள்ளதாக ஐதீகம். கடக ராசிக்கு அதிபதியான இவர் உயிர்களிடத்து மோக குணத்தை தூண்டுபவர். இவர் ஒருவரது ஜாதகத்தில் வலு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் நல்ல மனோ திடத்துடன் இருப்பார். இவரது நீச்சம் மன நோய் தரும். சந்திரனது ஆதிக்கத்தால் மனித உடலில் மூளை, வயிறு, மார்பு போன்ற உறுப்புகள் பாதிப்படையும்.
நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரகன். காலரா, பாலியல் தொடர்பான நோய்கள், நுரையீரல் நோய்கள் ஆகியன இவரது நீச்சத்தால் உண்டாவன. நீர் உணவுகள், தேன், மது, உறக்கம், குதிரை, மாறு கண், காச நோய், மலர்கள், வெண்ணெய் போன்றவற்றின் காரணகர்த்தா. வெண்மை நிற மலர்களால் அர்சிப்பதாலும், வெள்ளை நிற ஆடைகள் உடுத்தி கொள்வதாலும், முத்து மாலை அணிவதாலும், பௌர்ணமி விரதம் இருப்பதாலும், அரிசி தானம் செய்வதாலும் சந்திர கிரக தோஷங்கள் விலகுகின்றன.
சந்திர தோஷம் அகல
ஈய உலோகத்தால் சந்திர பகவானின் உருவம் செய்து அவருக்கு பிடித்தமான வெண்ணிற மலர்களை அர்ச்சனை செய்ய வேண்டும். திங்கட் கிழமைகள் தோறும் விரதம் இருக்க வேண்டும். சந்திரரை வெண்ணிற ஆடைகளால் அலங்காரம் செய்யலாம். முருங்கை சமித்து கொண்டு தூபமிட்டும் தீபம் எற்றியும் வழிபட வேண்டும். சிவன் கோயில் சென்று அம்பாளுக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபடலாம்.
திருநாவுக்கரசரும், அப்பூதி அடிகளும்
திருநாவுக்கரசர் ஒரு சமயம் உழவாரப் பணி செய்ய திங்களூர் சென்றிருந்தார். அச் சமயம் அங்கு அப்பூதி அடிகள் என்பவர், நாவுககரசர் பெயராலே பல தர்ம காரியங்களை செய்து வருவதைக் கண்டு அவர் இல்லம் சென்றார். நாவுக்கரசரை கண்ட அப்பூதி அடிகள் உள்ளம் மகிழ்ந்து விருந்தோம்பலுக்கு ஆயத்தமானார். தனது மகனை வாழை இலை பறிக்க தோட்டத்திற்கு அனுப்ப, அங்கு அந்த சிறுவனை பாம்பு தீண்ட உயிரிழந்தான். இச் செய்தியை அறிந்தால் எங்கே நாவுக்கரசர் விருந்து உண்ண மாட்டாரோ என்றெண்ணிய அப்பூதி அடிகள் மகன் இறந்ததை மறைத்து நாவுக்கரசருக்கு அமுது படைத்தார். இதனை அறிந்த நாவுக்கரசர், இறந்த அப்பூதி அடிகளின் மகனை இத் திருத் தலத்திற்கு எடுத்து சென்று, "ஒன்று கொலாம் அவர் சிந்தை" எனத் தொடங்கும் பதிகம் பாடி இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தார். இத் தகைய பெரும் பேறு பெற்ற தலம் இது.
மக்களின் மூச்சுக் காற்றில் சந்திரன் இட கலை ஆனவர். சந்திரன் சூரியனிடம் இருந்து முழுவதும் பிரிந்திருக்கும் நாள் பௌர்ணமி. சந்திரனை ராகு அல்லது கேது பற்றும் நாள் சந்திர கிரகணம். இது பௌர்ணமி தினங்களில் நடைபெறும். வலக் கையில் கதையும், இடக் கையில் வரதமும் கொண்டு காட்சி தருபவர். வெள்ளாடை உடுத்தி, முத்து மாலை, வெண் சந்தனம், பன்னிற மலர் மாலைகள் அணிந்து காட்சி தருபவர். சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத் திருத் தலம் வந்து கைலாச நாதரையும், பெரியநாயகி அம்பாளையும், பின்னர் சந்திர பகவானையும் தரிசிக்க தோஷ நிவர்த்தி பெறலாம். இன்றும் ஆண்டுதோறும் பங்குனி உத்திர காலை 06:00 சூரிய ஒளி சிவ லிங்கத்தின் மீதும், மறுநாள் பிரதமை திதியில் மாலை 06.30 மணியளவில் சந்திர ஒளி சிவலிங்கத்தின் மீதும் படுவது மிகச் சிறப்பு.