சுவாமி : கற்கடேஸ்வரர்.
🌻அம்பாள் : அருமருந்தநாயகி, அபூர்வநாயகி.
🌻மூர்த்தி : கணபதி, முருகன், சந்திரன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, தன்வந்தரி, அகஸ்தியர்.
🌻தீர்த்தம் : நவபாஷாண தீர்த்தம்.
🌻தலவிருட்சம் : பஞ்சதள வில்வம்.
🌻தலச்சிறப்பு : தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் காவிரி நதியின் வடகரை தலங்களில் 42வது தலம் ஆகும். கற்கடேஸ்வரர் திருக்கோவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இரண்டு அம்பாள் தனிதனிச் சன்னதிகளில் அருள்பாலிப்பது சிறப்பாகும். கோவிலின் உள்ளே சென்றவுடன் முதலில் விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி உள்ளது. முன் மண்டபத்தில் அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் தனி தனி சந்நிதிகளில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறை மேற்கு உட்பிரகாரத்தில் கணபதி, முருகன் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர். நால்வர் சந்நிதியும் உட்பிரகாரத்தில் உள்ளது. தன்வந்தரி, அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிரகாரத்தில் உள்ளனர். இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. கோவிலின் நுழைவுவாயிலில் சந்திரன் சன்னதி உள்ளது. இத்தலத்தில் சந்திரன் யோக நிலையில், “யோக சந்திரனாக” காட்சி தருகிறார். ஜாதகத்தில் சந்திர திசை உள்ளவர்கள் சந்திரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. கோவிலின் மதிற்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது.
🌻இத்தலம் கடக ராசிக்காரர்களுக்கான பரிகார தலம் ஆகும். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபட்டால் பலன் உண்டு. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாட்களில், தேய்பிறை அஷ்டமி நாட்களில் இத்தல இறைவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் நன்மைகள் நடைபெறும். மேலும் அமாவாசை, செவ்வாய், சனிக்கிழமைகளிலும் வழிபாடு செய்ய உகந்த நாட்கள் ஆகும். நீண்டகாலமாக நோயுற்ற ஆயில்யம் மற்றும் பிற நட்சத்திரக்காரர்கள் இந்த நாட்களில் கற்கடேஸ்வரரையும், அருமருந்து நாயகியையும் வழிபட்டு, அபிஷேகம் செய்த நல்லெண்ணெய்யை உட்கொண்டால் சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி ஆகும். அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
🌻இறைவன் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டப்பட்ட காயமும் இன்றும் உள்ளது. சிவனை வழிபட்ட இந்திரன் தன் தவறை உணர்ந்து திருந்தியதால் இத்தலம், திருந்துதேவன்குடி என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்கு நண்டாங் கோவில் என்ற பெயர் தற்போது வழக்கத்தில் உள்ளது. நண்டு சிவனை வழிபடும் சிற்பம் ஒன்று இத்தலத்தில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.
🌻தல வரலாறு : ஒரு சமயம் துர்வாசமகரிஷி, சிவபூஜை செய்து விட்டு செல்லும் போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் நடையைப் பார்த்து, நீங்கள் நண்டு ஊர்ந்து செல்வதைப் போல நடக்கிறீர், என்று கேலி செய்தான். இதனால் கோபம் கொண்ட துர்வாசமகரிஷி, கந்தர்வனை நண்டாக பிறக்கும்படி சபித்தார். மனம் வருந்திய கந்தர்வன் சாபவிமோசனம் வேண்டினான். துர்வாசர் இத்தல இறைவனை வழிபட கூறினார், அதன்படி இத்தலத்தில் நண்டு வடிவில் கந்தர்வன் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றான்.
🌻தல புராணப்படி பார்வதி ஒரு சமயம் இத்தல இறைவனை நண்டு உருவில் வந்து கோவிலைச் சுற்றியுள்ள அகழியில் இருந்த நீரில் உள்ள தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். தேவேந்திரனும் அதே சமயம் தன் ஆணவம் நீங்க, குரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து சிவபூஜை செய்தான். பூஜையில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து வழிபாடு செய்வது வழக்கமாக கொண்டான். தேவேந்திரன் அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுவதை கண்டு கோபம் கொண்டான். இதனால் இந்திரன் லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். அப்பொழுது கத்தியின் வெட்டு சிவபெருமான் மீது விழுந்தது. சிவபெருமான் லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி நண்டு உருவில் இருந்த பார்வதியை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். நண்டு உருவில் வந்தது பார்வதி என்ற உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். எனவே இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது.
🌻கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகளை காணலாம். லிங்கத் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளை இன்றும் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம்பசு பாலைக் கொண்டு இரவில் சிவலங்கத்தை அபிஷேம் செய்யும் பொழுது நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இத்தல இறைவன் கற்கடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
🌻🌻🌻🌻🌻🌻🌻