Search This Blog

Saturday, 3 September 2016

கண்பார்வை குறை உள்ளவர்கள் வந்து வணங்கி, குறை நீங்கப் பெறும் ஸ்தலம் !!!

எண்கண் சுப்ரமணியசுவாமி கோவில்

எண்கண் சுப்ரமணியசுவாமி கோவில் க்கான பட முடிவு

  • சுமார் 1000வருட பழமையான திருத்தலம். இது சிவன் கோவில் என்று கூறுகின்றனர். ஆனால் சுப்ரமணியசுவாமியே பிரதான இறைவனாக இருக்கிறார்.
  • பிரம்மாவிடம் முருகபெருமான் பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன என்று கேட்க, அவர் பதில் கூற இயலாததால் அவரை முருகப் பெருமான் சிறையில் அடைத்தார். அவருடைய படைத்தல் தொழிலையும் தானே பொறுப்பு ஏற்று நடத்தினார். இதனால் மனம் வருந்திய பிரம்மா தனது எட்டு கண்களாலும் சிவனே நோக்கி தவம் இயற்றினார். சிவபெருமான் அவர் முன்பு தோன்ற, நடந்தவைகளை எடுத்துக் கூறி தனக்கு விடுதலை தர வேண்டினார் பிரம்மா  . சிவபெருமானும் முருகனிடம் அவரை விடுதலை செய்ய கோரினார்.
  • பிரணவ மந்திரம் தெரியாதவர் படைப்பு தொழிலை மேற்கொள்வது சரியில்ல என்று வாதம் செய்தார்.சிவபெருமானும் தன் மைந்தனிடம், நீ எனக்கு பிரணவ மந்திரத்தை எடுத்துக் கூறியது போல் அவருக்கும் எடுத்துரைத்து அவரவர் தொழிலை அவரவர் செய்தால் தான் செம்மையாக நடைபெறும் என்று முருகபெருமானை சமாதானம் செய்தார்.
  • அதுபோலவே முருகபெருமானும் பிரம்மாவிற்கு பிரணவ மந்திரத்தை நன்கு விளக்கி அவரை விடுதலை செய்ததால், இந்த தலத்திற்கு பிரம்மபுரம் என்றும், எட்டு கண்களால் பூஜித்ததால் எண்கண் என்றும் அழைக்கப்பட்டதாக தல புராணம் மூலம் அறிகிறோம்.
  • எண்கண்களால் சிவனை வழிபட்ட தலம் என்பதால், இங்கு கண் நோய் உற்றவர்கள் வந்து விரதம் இருந்து வழிபடுவோர் நலன் பெறுகின்றனர் என்பதும்  பதினாறு பேறுகளும் பெற்று சுகமாய் வாழ்வார்கள் என்பதும் ஐதீகம்.
  • இத்தலத்தில் சுப்ரமணியர் தென்திசை பார்த்து நடராஜர் அம்சத்துடன் இருப்பதால் இவரது சன்னதியை சபை என்றே அழைக்கின்றனர். தென் திசையின் உரியவர் தெட்ஷிணா மூர்த்தி இங்கு முருகன் தென்திசை நோக்கி இருப்பது ஞானகாரனாக இருப்பதாகவும்  ஆயுள் காரனாக ஆரோக்கியம் நல்குபவராகவும் விளங்குகிறார்.
  • இங்குள்ள குமார தீர்த்தத்தில் விசாக நட்சத்திரத்து அன்று நீராடி சண்முகார்ச்சணை செய்ய சகல நலன்களும் பெறுவர் என்பது நம்பிக்கை.
  • இங்கு மூலவர் ஆறுமுகபெருமான் தனியாக மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றார். இருபுறத்திலும் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகின்றார். இந்த சிற்பம் மிகவும் அழகாக அமைந்து, முன்புறம் மூன்று முகங்கள், பின்புறம் மூன்று முகங்கள் ஆக ஆறுமுகத்துடன் பன்னிருகைகளில் கத்தி, வேல், அம்பு, சூலம், பாசம் வில், கேடயம், அங்குசம், சேவல் கொடி ஆகிய ஆயுதங்களுடன் அம்சமாக இருப்பதும், கைகளின் விரல்கள் கூட தனித்தனியாக தெரிவதும் இந்த சிற்பத்திற்கு சிறப்பு. அதுமாத்திரம் அன்றி, இந்த முழு சிற்பத்தை முருகன் அமர்ந்திருக்கும் மயிலின் கால்களே தாங்கி நிற்பதும் அற்புதமான சிற்பத்தின் படைப்பு என்பதாகும்.
  • மேலும் இந்த சிற்பத்தின் பின்னால் ஒரு சரித்திரம் உண்டு.சிக்கல் சிங்கார வேலனை சிலை வடித்த சிற்பி செவ்வேள். இந்த தலத்தில் சிலை செய்ய ஆணையிட்டவர் முத்தரச சோழன். இதனுடைய நேர்த்தியைக் கண்டு, இது போன்று மற்றொரு அழகிய சிலை இருக்கக் கூடாது என்று சிற்பி செவ்வேளின் கட்டை விரலை தானமாக கேட்டு கட்டை விரலை இழந்தான் சிற்பி.
  • ஆனாலும் கட்டை விரல் இல்லாத நிலையிலும்  முருகனுக்கு சிலை செய்யும் வேட்கையில், அரசனின் ஆணையையும் மீறி  எட்டுக்குடி கோவிலுக்கு முருகனை சிலை வடித்தார். அதனுடைய அழகைக் கண்டு மனம் பொறுக்காத சோழ மன்னன், சிற்பி செவ்வேளின் கண்களைப் பறித்தான். இதன் பின்னரும் மனம் தளராது காட்டினுள் சென்று, ஒரு கருங்கல் எடுத்து ஒரு சிறுமியின் உதவியுடன் இந்த சிலையை உருவாக்கினான். இறுதியில் சிலையின் கண் திறக்கும் முக்கியமான இறுதிக் கட்டத்தில் உதவி செய்த சிறுமியின் கையில் உளிபட்டு, ரத்தம் பீறிட்டது. அந்த ரத்தம் சிற்பி செவ்வேளின் கண்கள் மீது பட்டு தெளிக்க முருகன் அருளால் சிற்பிக்கு பார்வை கிடைத்தது.
  • எனவே தான் இங்கு கண்பார்வை குறை உள்ளவர்கள் வந்து வணங்க, குறை நீங்கப் பெறுகின்றனர் என்று கூறுகின்றனர்.
  • இங்கு சிவன், விநாயகர், முருகபெருமான் உள்ளனர். முருகபெருமானுக்கும், சிவனுக்கும் தனித்தனி சன்னதி உண்டு. விநாயகர் இங்கு நர்த்தன கணபதியாக அழைக்கப்படுகிறார்.
  • இங்கு தைப்பூசம் மாதாந்திர கார்த்திகை, கந்தசஷ்டி, ஆடிக்கார்த்திகை, திருக்கார்த்திகை, பங்கு உத்திரம் மற்றும் தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, பொங்கல், தீபாவளி ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

நெற்றி விழி பட்டெரிய நட்டமிடு முத்தமாநி
எனக்கு மனமொத்த கழல் வீரர்
நெய்க்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தமிறு கத்தழுவுமார்பா–
திருப்புகழ் (–6)

  • தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையும் கோவில் திறந்து இருக்கும்.

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில், எண்கண் – 612603
திருவாரூர் மாவட்டம்
தொலைபேசி எண். 04366 – 278531, 9488415137

**************

பழமுதிர்ச்சோலை - ஆறாவதுபடை வீடு

 
  • முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை " என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை " என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.
  • எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது-.

கோவில் அமைவிடம் :
  • மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
  • மலையின் அடிவாரத்தை சென்றடைந்ததும் அழகர்கோவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் கோவில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. அழகர் கோவில் நுழைவுவாயில் முன்பு நாம் இறங்கியதும், வேறு யாரும் வரவேற்கிறார்களோ இல்லையோ, குரங்குகள் தவறாமல் கூட்டமாக வந்து வரவேற்கின்றன.
  • அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம்.சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

வரலாற்று ஆதாரங்கள் :
  • திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.
  • கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.
  • ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
  • பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றையதினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

அவ்வையை சுட்ட பழம் :

  • அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்த தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாக சொல்கிறார்கள்.
  • தனது புலமையால் புகழின் உச்சிக்கு சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.
  • அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் அவருக்கு களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.
  • அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.
  • உடனே அந்த சிறுவனிடம், "குழந்தாய்... எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்து தர முடியுமா? " என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.
  • சிறுவனின் கேள்வி அவ்வைக்கு புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப்பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப்பழத்தையே கொடுப்பா... " என்று கேட்டுக்கொண்டார்.
  • தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப்பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்த பழங்களை பொறுக்கிய அவ்வை, அந்த பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.
  • இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா? " என்று கேட்டார். சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்துபோனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.
  • மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.


  • இந்த திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன்  கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

அதிசய நூபுர கங்கை :




  • ழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்த தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.
  • மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்த தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
  • இந்த தீர்த்த தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எப்பேற்பட்ட நோயும் பறந்தோடிவிடும் என்பதால், இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள்.
  • இந்த தீர்த்த தண்ணீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோவை தயார் செய்யப்படுகிறது.
  • மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம்.
  • சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் என்கிறார்கள்.

திருமண பரிகார தலம் :
  • முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.
  • திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, வெற்றிக்கரமான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.
***********
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]