கண்பார்வை குறை உள்ளவர்கள் வந்து வணங்கி, குறை நீங்கப் பெறும் ஸ்தலம் !!!
எண்கண் சுப்ரமணியசுவாமி கோவில்
சுமார் 1000வருட பழமையான திருத்தலம். இது சிவன் கோவில் என்று கூறுகின்றனர். ஆனால் சுப்ரமணியசுவாமியே பிரதான இறைவனாக இருக்கிறார்.
பிரம்மாவிடம் முருகபெருமான் பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன என்று கேட்க,
அவர் பதில் கூற இயலாததால் அவரை முருகப் பெருமான் சிறையில் அடைத்தார்.
அவருடைய படைத்தல் தொழிலையும் தானே பொறுப்பு ஏற்று நடத்தினார். இதனால் மனம்
வருந்திய பிரம்மா தனது எட்டு கண்களாலும் சிவனே நோக்கி தவம் இயற்றினார்.
சிவபெருமான் அவர் முன்பு தோன்ற, நடந்தவைகளை எடுத்துக் கூறி தனக்கு விடுதலை
தர வேண்டினார் பிரம்மா . சிவபெருமானும் முருகனிடம் அவரை விடுதலை செய்ய
கோரினார்.
பிரணவ மந்திரம் தெரியாதவர் படைப்பு தொழிலை மேற்கொள்வது சரியில்ல என்று வாதம் செய்தார்.சிவபெருமானும் தன் மைந்தனிடம், நீ எனக்கு பிரணவ மந்திரத்தை எடுத்துக்
கூறியது போல் அவருக்கும் எடுத்துரைத்து அவரவர் தொழிலை அவரவர் செய்தால் தான்
செம்மையாக நடைபெறும் என்று முருகபெருமானை சமாதானம் செய்தார்.
அதுபோலவே முருகபெருமானும் பிரம்மாவிற்கு பிரணவ மந்திரத்தை நன்கு விளக்கி
அவரை விடுதலை செய்ததால், இந்த தலத்திற்கு பிரம்மபுரம் என்றும், எட்டு
கண்களால் பூஜித்ததால் எண்கண் என்றும் அழைக்கப்பட்டதாக தல புராணம் மூலம்
அறிகிறோம்.
எண்கண்களால் சிவனை வழிபட்ட தலம் என்பதால், இங்கு கண் நோய் உற்றவர்கள் வந்து
விரதம் இருந்து வழிபடுவோர் நலன் பெறுகின்றனர் என்பதும் பதினாறு பேறுகளும்
பெற்று சுகமாய் வாழ்வார்கள் என்பதும் ஐதீகம்.
இத்தலத்தில் சுப்ரமணியர் தென்திசை பார்த்து நடராஜர் அம்சத்துடன் இருப்பதால்
இவரது சன்னதியை சபை என்றே அழைக்கின்றனர். தென் திசையின் உரியவர் தெட்ஷிணா
மூர்த்தி இங்கு முருகன் தென்திசை நோக்கி இருப்பது ஞானகாரனாக இருப்பதாகவும்
ஆயுள் காரனாக ஆரோக்கியம் நல்குபவராகவும் விளங்குகிறார்.
இங்குள்ள குமார தீர்த்தத்தில் விசாக நட்சத்திரத்து அன்று நீராடி சண்முகார்ச்சணை செய்ய சகல நலன்களும் பெறுவர் என்பது நம்பிக்கை.
இங்கு மூலவர் ஆறுமுகபெருமான் தனியாக மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில்
அருள்பாலிக்கின்றார். இருபுறத்திலும் வள்ளி தெய்வானையுடன் காட்சி
தருகின்றார். இந்த சிற்பம் மிகவும் அழகாக அமைந்து, முன்புறம் மூன்று
முகங்கள், பின்புறம் மூன்று முகங்கள் ஆக ஆறுமுகத்துடன் பன்னிருகைகளில்
கத்தி, வேல், அம்பு, சூலம், பாசம் வில், கேடயம், அங்குசம், சேவல் கொடி ஆகிய
ஆயுதங்களுடன் அம்சமாக இருப்பதும், கைகளின் விரல்கள் கூட தனித்தனியாக
தெரிவதும் இந்த சிற்பத்திற்கு சிறப்பு. அதுமாத்திரம் அன்றி, இந்த முழு
சிற்பத்தை முருகன் அமர்ந்திருக்கும் மயிலின் கால்களே தாங்கி நிற்பதும்
அற்புதமான சிற்பத்தின் படைப்பு என்பதாகும்.
மேலும் இந்த சிற்பத்தின் பின்னால் ஒரு சரித்திரம் உண்டு.சிக்கல் சிங்கார வேலனை சிலை வடித்த சிற்பி செவ்வேள். இந்த தலத்தில் சிலை
செய்ய ஆணையிட்டவர் முத்தரச சோழன். இதனுடைய நேர்த்தியைக் கண்டு, இது போன்று
மற்றொரு அழகிய சிலை இருக்கக் கூடாது என்று சிற்பி செவ்வேளின் கட்டை விரலை
தானமாக கேட்டு கட்டை விரலை இழந்தான் சிற்பி.
ஆனாலும் கட்டை விரல் இல்லாத நிலையிலும் முருகனுக்கு சிலை செய்யும்
வேட்கையில், அரசனின் ஆணையையும் மீறி எட்டுக்குடி கோவிலுக்கு முருகனை சிலை
வடித்தார். அதனுடைய அழகைக் கண்டு மனம் பொறுக்காத சோழ மன்னன், சிற்பி
செவ்வேளின் கண்களைப் பறித்தான். இதன் பின்னரும் மனம் தளராது காட்டினுள்
சென்று, ஒரு கருங்கல் எடுத்து ஒரு சிறுமியின் உதவியுடன் இந்த சிலையை
உருவாக்கினான். இறுதியில் சிலையின் கண் திறக்கும் முக்கியமான இறுதிக்
கட்டத்தில் உதவி செய்த சிறுமியின் கையில் உளிபட்டு, ரத்தம் பீறிட்டது. அந்த
ரத்தம் சிற்பி செவ்வேளின் கண்கள் மீது பட்டு தெளிக்க முருகன் அருளால்
சிற்பிக்கு பார்வை கிடைத்தது.
எனவே தான் இங்கு கண்பார்வை குறை உள்ளவர்கள் வந்து வணங்க, குறை நீங்கப் பெறுகின்றனர் என்று கூறுகின்றனர்.
இங்கு சிவன், விநாயகர், முருகபெருமான் உள்ளனர். முருகபெருமானுக்கும்,
சிவனுக்கும் தனித்தனி சன்னதி உண்டு. விநாயகர் இங்கு நர்த்தன கணபதியாக
அழைக்கப்படுகிறார்.
இங்கு தைப்பூசம் மாதாந்திர கார்த்திகை, கந்தசஷ்டி, ஆடிக்கார்த்திகை,
திருக்கார்த்திகை, பங்கு உத்திரம் மற்றும் தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு,
பொங்கல், தீபாவளி ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
நெற்றி விழி பட்டெரிய நட்டமிடு முத்தமாநி
எனக்கு மனமொத்த கழல் வீரர்
நெய்க்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தமிறு கத்தழுவுமார்பா–
திருப்புகழ் (–6)
தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையும் கோவில் திறந்து இருக்கும்.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில், எண்கண் – 612603
திருவாரூர் மாவட்டம்
தொலைபேசி எண். 04366 – 278531, 9488415137
No comments:
Post a Comment